புதுச்சேரி, ஜன. 28: இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தூய்மை செயல்திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தூய்மை இந்தியா காட்சியை உணர்வதற்கு விரிவான, பொறுப்புணர்வு மற்றும் நிலையான முறையில் அனைத்து துறைகளிலும் தூய்மையின் கூறுகளை தூண்டுவதில் பிரதானமாக செயல்படுகிறது. இத்திட்டத்தின் செயலாக்க முகமையான புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றமானது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.11.62 லட்சம் பெற்றுள்ளது. தூய்மை செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் அதிக அளவில் மரம் நடுவதற்கு மா, பலா, தென்னை, மாதுளை, சப்போட்டா, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற 3 ஆயிரம் பழ வகை மரக்கன்றுகளை வழங்குகிறது.அதிக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சிபள்ளிகளில்
நடத்தப்படுகிறது.
அதன்படி, ஏம்பலம் மறைமலை அரசு மேல்நிலை பள்ளி, செம்பியம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி, கோர்க்காடு அரசு உயர்நிலை பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று மாலை அமைச்சர் கந்தசாமி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, இன்று (28ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு கரிக்கலாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 3 மணிக்கு சேலியமேடு கேவி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 3.30 மணிக்கு ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியிலும் நடக்கிறது. நாளை (29ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியிலும், 3 மணிக்கு கிருமாம்பாக்கம் பிஆர் அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளியிலும், 3.30க்கு பனித்திட்டு அரசு உயர்நிலை பள்ளியிலும் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
மரம் நடுவதற்காக தோட்ட கருவிகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. மரம் நடும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு காற்று மாசு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ரூ.36 ஆயிரம் (தலா ரூ.4 ஆயிரம் 9 பள்ளிகளுக்கு) வழங்கப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தூய்மை செயல்திட்டத்தை பரப்புவதற்கு இதுபோன்ற மரம் நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வருடம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நடத்தப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்ற செய்திகுறிப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.