×

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம், ஜன. 28: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே ஓட்டிமேடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுபோல் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி தேவங்குடியில் உள்ள பெருமாள் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி திருடு போயிருந்தது. அதுபோல் கருவேப்பிலங்குறிச்சி அருகே கீழப்பாலையூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து கம்மாபுரம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் முன்னுக்குப்பின்
முரணான தகவல்களை கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்திய போது அவர் கம்மாபுரத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் சுந்தரவேல் (33) என்பதும் ஏற்கனவே கம்மாபுரம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.


Tags : temple temple ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்...