மூணாறு, ஜன.28: மூணாறு அருகே கேரள-தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள சதுரங்கபாறை பகுதியில் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆக்கிரமித்த வருவத்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது.
மூணாறு அருகே கேரளா-தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள சதுரங்கபாறை கிராமத்தில் தமிழ்நாடு எல்லை பகுதியை ஒட்டியுள்ள சர்வை எண் 98/2 ல் தொகுதி எண் 19ல் உள்ள 9 ஏக்கர் நிலத்தை சதுரங்கபாறையை சேர்ந்த சாக்கோ, பழனிச்சாமி செட்டியார் ஆகியோர் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்றனர். நிலத்தை வாங்கிய உரிமையாளர் பேபி ஜோசப் நிலத்தின் உரிமம் மற்றும் நிலத்தின் சர்வை எண் சம்பந்தமான சந்தேகங்களுக்காக கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில் பேபி ஜோசப் வாங்கிய இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்றும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் 9 ஏக்கர் நிலத்தின் உரிமத்தை வருவாய் பிரிவு அதிகாரி ரத்து செய்தார். இந்த அதிரடி நடவடிக்கையின் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை நேற்று முன்தினம் வருவத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.