தேனி, ஜன.28: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை, சென்னை பீனிக்ஸ் வலி நிவாரண மையம் இணைந்து தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இரண்டு நாள் இலவச வலி நிவாரண சிகிச்சை முகாம் நடத்தினர். சென்னையில் இருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். நரம்பு பாதிப்பு கண்டறியும் பரிசோதனை, எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை, மூட்டு தேய்மானம், முதுகுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இரண்டு நாள் முகாமில் தேனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மொத்தம் 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.