×

ஆபத்தை விளைவிக்கும் புயல் காப்பகம் இடித்து அகற்ற மக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.28: திருப்பாலைக்குடியில் உள்ள புயல் காப்பகம் பயனற்ற நிலையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதனை இடித்து தரைமட்டம் செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் புயல், மழை போன்ற இயற்கை சீற்றத்தின் போது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புயல் காப்பகம் கட்டப்பட்டது. இயற்கையின் சீற்றம் இருக்கு போதெல்லாம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்க வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

அந்த கட்டிடம் பழுதடைந்து விட்டதை கவனத்தில் கொண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு சேவை மைய கட்டிடத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து திருப்பாலைக்குடி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புயல் அறிவிப்பு வந்த காலக்கட்டங்களில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இங்கு தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர். புயல் காப்பகம் பழுதடைந்ததை காரணம் காட்டிதான் புதிய பல்நோக்கு சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட பின்னரும் பழைய புயல் காப்பகத்தை தரைமட்டமாக்காமலோ அல்லது சீரமைக்கப்படாமலோ இருப்பது இப்பகுதி மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அந்த புயல் காப்பக கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக பெயர்ந்து விழுந்து வருவதுடன், கட்டிடம் நாளுக்கு நாள் கூடுதலாக பழுதடைந்து வருகிறது. இப்படி இருப்பதால் அப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடமாடும் பகுதியாக உள்ளது. எனவே இந்த கட்டிடம் இடிந்து விழுந்து விட்டால், ஏதேனும் உயிர் சேதம் பொருட்சேதம் ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எது எப்படி போனாலும் விபத்து ஏதேனும் நடப்பதற்கு முன்னால் இந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை எனில் கட்டிடத்தின் உறுதி தன்மையை கண்டறிந்து நன்றாக இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தை பழுது பார்த்து வேறு ஏதாவது பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலனை காக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது