×

நர்ஸ் வீட்டு கதவை தட்டியவர் தற்கொலை முயற்சி மேம்பாலத்தில் இருந்து குதித்தார்

திருமங்கலம், ஜன. 28: மதுரை மாவட்டம், செல்லம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பாரதிராஜா (32), பேரையூரில் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது ஒர்க்ஷாப் அருகில் சாப்டூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் குடிபோதையில் பாரதிராஜா, நர்ஸ் வீட்டு கதவை தட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாப்டூர் போலீசில் நர்ஸ் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பாரதிராஜாவை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் டூவீலரில் பாரதிராஜா திருமங்கலம் வந்தார். ராஜபாளையம்-திருமங்கலம் ரோட்டில் ஆலம்பட்டி மேம்பாலத்தில் டூவீலரை நிறுத்தினார்.
பின்னர், 15 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்து மயங்கினார். இதை கவனித்த வாகன ஓட்டிகள், இது குறித்து 108 ஆம்புலன்ஸ், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாரதிராஜாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து பாரதிராஜா கூறுகையில், ‘என்னை அடித்து தாக்கிய நர்ஸ் போலீசில் புகார் செய்தார். இதனால், மனவேதனையில் இருந்த நான் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றேன்’ என்றார்.

Tags : nurse ,doorkeeper ,
× RELATED சைரன் விமர்சனம்