திருச்சி, ஜன.28: திருச்சி ராமகிருஷ்ணாபாலம் அருகே கழிவறையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இவர் பலூர் வியாபாரம் செய்து வந்தார். தொழில்போட்டி காரணமாக நண்பனே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தலைமறைவான நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி தென்னூர் அண்ணாநகர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் முகமது இசாக் (21). பலூன் வியாபாரி. நேற்றுஇரவு 9.30 மணி அளவில் மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள பொது கழிப்பிடத்தில் உள்ள கழிவறையில் கழுத்தறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலை அடுத்து விரைந்து வந்த கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவரது நண்பரும் அதே பகுதியை சேர்ந்த முகமது அனிபா என்பவரும் ஒரே தொழில் செய்து வந்தனர். இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர். இந்நிலையில் முகமதுஇசாக் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில் உடன் இருந்த கூட்டாளி முகமது அலிபா மாயமானது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தலைமறைவான முகமது அலிபாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால் மட்டுமே உண்மை தெரியவரும்.