துறையூர், ஜன.28: துறையூரில் நரிக்குறவர் இன மக்களுக்கு தனியாக சுடுகாடு அமைத்து தரக்கோரி துறையூர்- முசிறி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர்-முசிறி பிரிவு சாலை அருகே நரிக்குறவர் இன மக்களுக்காக தனியாக காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு வசதி இல்லை என கூறுகின்றனர். தங்கள் இனமக்கள் இறந்தால் 2 கிலோ மீட்டர் தொலைவில் பிரேதத்தை தூக்கி சென்று உடல்தகனம் செய்ய வேண்டும். ஏற்கனவே புதைக்கப்பட்ட பிரேத இடத்தில் குழிதோண்டி தற்போது இறந்தவர்களின் உடலை புதைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தங்களின் காலனி பகுதிக்கு அருகிலேயே புதிதாக சுடுகாடு அமைத்துத்தர இப்பகுதி நரிக்குறவர் இன மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.