சத்தியமங்கலம், ஜன.28: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள ஒற்றைப்படை மதகு பாசனப்பகுதிகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 9 ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜனவரி 9 முதல் ஏப்ரல் 30 ம் தேதி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 டிஎம்சி க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது. 8 அல்லது 10 நாட்களில் 2ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.31 அடியாகவும், நீர் இருப்பு 30.5 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 389 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் 500 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1400 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.