×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற கருத்து கேட்க வேண்டும்

கோவை, ஜன. 28:  மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றவிவசாயிகள் மற்றும் மக்களின் கருத்து கேட்க வேண்டும் என கருப்பு துணியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு விவசாயிகள் மனு கொடுத்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசிடமும், மக்களிடமும் கருத்துகள் கேட்காமலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என மத்திய சுற்று சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மனுவை அளிக்க வந்த விவசாயிகள் தலையில் கருப்பு துணியால் முக்காடு போட்டு வந்து மனு கொடுத்தனர். பா.ஜ. சார்பில் அளித்த மனு: கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பா.ஜ. சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாடுகளின் சார்பில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் கோவையிலும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் நினைவாக அரசே சொந்த செலவில் நினைவு தூண் அமைத்து தருவதோடு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்த வேண்டும். சாதி சான்றிதழை பள்ளியிலேயே வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அளிக்கப்பட்ட மனு: தமிழக அரசு நடப்பாண்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்திய காரணத்தினால் மாணவர்கள் சாதி சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற வேண்டியுள்ளது. இவ்வாறு விண்ணப்பிக்கும்போது பெற்றோரின் கல்வி சான்று குறிப்பாக தந்தையின் கல்வி சான்றிதழ் அல்லது சாதி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் கல்வி அறிவு இல்லாத பெற்றோர் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே குழந்தைகளுக்கு சாதி சான்றிதழை பள்ளிலேயே வழங்க வேண்டும். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட மனு: பயிர்சேதம் செய்யும் மயில்களை கொல்லும் விவசாயிகளை கைது செய்யக்கூடாது. மயில்கள் எண்ணிக்கை அதிகரித்து விவசாயிகள் பயிரிடும் மிளகாய், தக்காளி, பச்சைபயிறு போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தேசிய பறவையாக மயிலுக்கு பதிலாக வேறு ஏதாவது அரிய வகை பறவையை அறிவித்து விவசாயிகளை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : implementation ,
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...