கிளை, கொப்பு வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கோபி,ஜன.28:  கோபி பகுதியில் கிளை வாய்க்கால் மற்றும் கொப்பு வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலையில் பாசனத்திற்கு கடைமடை வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்திற்கு ஆண்டுதோறும் தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். கீழ்பவானி பாசன வாய்க்கலில் தண்ணீர் விடும்போது 100க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால், கொப்பு வாய்க்கால் கசிவு நீர் வாய்க்கால் மூலம் பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும் முன் கிளை வாய்க்கால் மற்றும் கொப்பு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பின்னரே தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிளை மற்றும் கொப்பு வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலையிலேயே தண்ணீர் விடப்பட்டது.இதனால் பல இடங்களில் வாய்க்கால்களில் செடி, கொடி போன்ற ஆக்கிரமிப்புகளும், வீட்டு குப்பைகளும் கொட்டப்பட்டு உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கீழ்பவானி பாசன வாய்க்காலில் தண்ணீர் விடப்படும் காலத்தில் மட்டும் தான் கிளை வாய்க்கால் மற்றும் கொப்பு வாய்க்கால் மூலம் பல நூறு ஏக்கர் வளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு கிளை வாய்க்கால் மற்றும் கொப்பு வாய்க்கால் தூர்வாரப்படாத நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. அதனால் உடனடியாக கிளை மற்றும் கொப்பு வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்,’ என்றார்.

Related Stories: