பெரம்பூர்: தமிழகத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்கவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்கவும் அரசு சார்பில், அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இ- சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிய முறையில் தங்களுக்கான சான்றிதழ்களை பெற்று வந்தனர். இந்நிலையில், அடிக்கடி சர்வர் பழுது, ஊழியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை, கணினி பழுது போன்ற காரணங்களால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி மார்க்கெட் பகுதியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இங்கு வராதீர்கள். பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லவும் என எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்றால், அங்கு ஒரு நாளைக்கு 30 பேர்தான், அதுவும் காலை 7 மணிக்கே சென்றால்தான் டோக்கன் கிடைக்கும். 30 பேருக்கு மேல் யாருக்கும் டோக்கன் தரப்பட மாட்டாது என வெளியே எழுதி ஒட்டி உள்ளனர்.