வேலூர், ஜன.28: வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது. நள்ளிரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் வாலாஜா டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் படர்ந்த பனிமூட்டத்தால் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது கார் மோதியது, தொடர்ந்து சரக்குவேன், மினிபஸ் உட்பட 9 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.