மார்த்தாண்டம், ஜன. 28: மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு தேசிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. உரிய ஆவணங்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து இதனை பெறலாம். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற இந்த தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இ-சேவை மையம் மூலம் முறையாக ஆவணங்களை சமர்ப்பித்து ஆன்-லைனில் விண்ணப்பித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் விண்ணப்பித்த முகவரிக்கு தபால் மூலம் அடையாள அட்டை வந்துவிடும் என கூறுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் மன வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கலெக்டர் இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மார்த்தாண்டம் வர்த்தக சங்க தலைவர் தினகர், செயலாளர் ராஜ் பினோ, துணைத் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஜெயசிங் ஆகியோர் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.