சென்னை: நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தேசிய கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பார்கவுன்சில் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, பார்கவுன்சில் உறுப்பினர்கள், கலந்துகொண்டனர்.
* மாநில நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தமிழ்வாணன் கொடியேற்றினார். இதேபோல், மாநில மனித உரிமை ஆணையத்தில் நீதிபதி துரை ஜெயசந்திரன் கொடியேற்றினார். காவல்துறை இயக்குனர் லட்சுமி பிரசாத் உடனிருந்தார்.
* அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியன் மற்றும் ஆணையத்தில் பணியாற்றும் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* எழிலகம் வளாகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, ஆணையர் அலுவலக இணை ஆணையர்கள் லட்சுமணன், மங்கையர்கரசி, வான்மதி, தலைமை தணிக்கை அலுவலர் லட்சுமி, சென்னை உதவி ஆணையர் கவெனிதா, திருக்கோயில் இதழ் ஆசிரியர் சசிக்குமார் மற்றும் கோயில்களின் செயல் அலுவலர்கள், தலைமையிட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், தேசிய மாணவர் படை, கலர் பார்ட்டி, சாரண, சாரணியர் மற்றும் வாத்தியக்குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய துறைகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அதிக விருதுகளை வென்றது. இந்த துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் இதை பெற்றுக் கொண்டனர். இதில் துணை ஆணையர்கள் குமாரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி, துணை கிரேஸ் லால்ரின்டிககி பச்சுவாவ், வட்டார துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், ஸ்ரீதர், ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீத்தாலட்சுமி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில், தென் மண்டல மேலாளர் கே.கதிரேசன் தேசிய கொடியேற்றி, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு எல்ஐசியின் பங்களிப்பு மற்றும் தென் மண்டல வணிகத்தின் சாதனைகளை குறிப்பிட்டு பேசினார். நிகழ்ச்சியில், எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்றனர்.
* கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் சுஜாதா ஜெயராஜ் (நிதி), எல்.நரசிம் பிரசாத் (இயக்கம் மற்றும் அமைப்புகள்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
* சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் மேலாண் இயக்குனர் கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
* சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
* காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் துறைமுக உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய வளாகத்தில் நீதிபதி தமிழ்வாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வில் பதிவாளர், மேத்யூ, பாஸ்கரன், நீதி சார் உறுப்பினர் லதா மகேஸ்வரி, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் லட்சுமிகாந்தன், உறுப்பினர் ஜெயந்தி, சென்னை தெற்கு மவாட்ட உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில், அதன் இயக்குனர் நாரயணபாபு தேசியக்கொடி ஏற்றினார்.
* கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டீன் வசந்தாமணி தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
* சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் செயல் இயக்குநர் டாக்டர்.த.பிரபு சங்கர், பொறியியல் இயக்குநர் மதுரை நாயகம், தலைமை பொறியாளர்கள் எஸ்.ஆறுமுகம், என்.ராஜேந்திரன், பொது மேலாளர் கோவிந்தாஜீலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
uதண்டையார்பேட்டை மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பில் சிபிசிஎல் நிர்வாக இயக்குனர் பாண்டே தேசியகொடியேற்றி, தொழில்பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆணையர் பாஸ்கர் நாயுடு பரிசுகள் வழங்கினார். இதே போன்று பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.