புழல்: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளின் அடையாள அணிவகுப்பு அறை கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.2.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், புழல் விசாரணை சிறையில் சுமார் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக சிறைவாசிகள் அடையாள அணிவகுப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனுடைய திறப்பு விழாவும், குடியரசு தின விழாவும் புழல் விசாரணை சிறையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ஏ.பி.சாஹி தலைமை வகித்தார். சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிஅரசர் பி.என்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறையில் கைதிகளின் அடையாள அணிவகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் துறை இயக்குனர் மற்றும் சிறைத்துறை தலைவர் ஆபாஷ்குமார், சிறைத்துறை துணைத் தலைவர்கள் கனகராஜ், முருகேசன், சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் செந்தாமரைக்கண்ணன், செந்தில்குமார், மூத்த வழக்கறிஞர் ரவிக்குமார்பால் மற்றும் சிறையில் உள்ள அனைத்து அலுவலர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வநாதன் நன்றி உரையாற்றினார்.