சென்னை: சென்னையின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையமான சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 260க்கும் மேற்பட்ட டைல்ஸ் உடைந்து சேதம் அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல், அண்ணாநகர், சென்ட்ரல் ஆகிய நிலையங்களில் 4 அலங்கார கண்ணாடிகள் திடீரென கீழே விழுந்துள்ளன. இதனால், பயணிகள் பீதியுடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் உள்ளிட்ட நிலையங்களில் கடந்த 2 மாதமாகவே டைல்ஸ் அதிக அளவில் உடைந்துள்ளது. அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த 260 டைல்ஸ் உடைந்துள்ளது. இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு ஊழியர்கள் தரப்பில் இருந்து இ-மெயில் மூலம் புகார் அனுப்பப்பட்டது.