மின் விளக்கு பழுதால் இருள் சூழ்ந்த ஏடிஎம் மையம்: பொதுமக்கள் அச்சம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் முருகன் கோயில் எதிரில் பாங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த ஏடிஎம் மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏடிஎம் மையத்தில் அமைக்கப்பட்ட மின்விளக்கு கடந்த மாதம் பழுதடைந்தது. இதனை வங்கி நிர்வாகம் இதுவரை சீரமைக்காததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பணம்  எடுப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவில் ஏடிஎம் மையம் இருள்சூழ்ந்து காணப்படுவதால், பணம் எடுப்பதற்கு  வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு, வழிப்பறி, கொள்ளை ஆசாமிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த ஏடிஎம் மையத்தில் பழுதடைந்த மின் விளக்கை விரைந்து சீரமைக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: