தென்காசி, ஜன. 24: காந்திய கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காந்தி வேடமணிந்து பங்கேற்ற நாடகங்கள், இலஞ்சியில் நடந்தது. தென்காசி அடுத்த இலஞ்சி ரதி மகாலில், அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் நிறைவு விழாவையொட்டி விழிப்புணர்வு நாடகங்கள் நடந்தது. இயக்க தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாதமுத்து, இளைஞரணி செயலாளர் திருமாறன், ராம்மோகன், மகளிர் இளைஞரணி தலைவர் டாக்டர் விஜயலட்சுமி, கண்ணன், அன்பு சிவன், ரங்கநாதன், இலஞ்சி மன்ற தலைவர் கணேஷ் பாபு, தென்காசி மன்ற தலைவர் சுப்பிரமணிய ராஜா, ராஜபாளையம் பீமராஜா, பாலகிருஷ்ண ராஜா, சமூக ஆர்வலர் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 26 பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காந்திபோல் வேடமணிந்தும், உடையணிந்து வந்தும் காந்திய கொள்கைகள் குறித்து நாடகத்தை அரங்கேற்றினர். இதில் ஏராளமான காந்தியவாதிகள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.