திருப்பூர், ஜன.24: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாநகர அமைப்பாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றியை பெற்று தந்த கழக தலைவருக்கு நன்றியையும், வெற்றிப் பெற்ற மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வது. திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணியின் புதிய அமைப்பாளராக ஆனந்தன், துணை அமைப்பாளராக ராமசாமி ஆகியோரை நியமனம் செய்த கழகத் தலைவருக்கு நன்றி தெரிவிப்பது.‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மாநில அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மத்திய அரசோடு கைகோர்த்துக் கொண்டு மக்கள் விரோத போக்கை கையாண்டு வருகிற மாநில அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பது. 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறையை கொண்டு வந்துள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, தங்கராஜ், ராமதாஸ், கராத்தே மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.