கோபி, ஜன.24: தந்தை பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநிலத் தலைவர் தேவராஜன், பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது வரை நடிகராகவே உள்ள ரஜினிகாந்த், நாடாளும் கனவில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்து பேசுவதை தவிர்க்க வேண்டும். பகுத்தறிவு கொள்கைகள், சீர்திருத்த சித்தாந்தங்கள், அரசியல் அடிச்சுவடி கூட தெரியாத ரஜினிகாந்த், பெரியாரை விமர்சிக்க தகுதி இல்லை. பெரியார் குறித்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டவர்களே விமர்சிக்க தயங்கிய நிலையில், பா.ஜ.வின் பினாமி குரலாக ரஜினிகாந்த், பெரியாரை விமர்சித்து உள்ளார். இதுபோன்ற தலைவர்களை விமர்சிக்கும் முன் யோசித்து பேச வேண்டும். தான் பேசிய கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. தான் பேசிய கருத்து தவறு என உணர்ந்து மனம் திருந்தினால்போதும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.