அடகு வைத்த டூவீலரை மீட்காததால் வாலிபர் தீக்குளித்து சாவு

ஓமலூர், ஜன.24:  ஓமலூர் அருகே பச்சனம்பட்டி ஊராட்சி ஆட்டுக்காரனூரைச் சேர்ந்தவர் தங்கவேல். கயிறு திரிக்கும் கூலித்தொழிலாளி. இவரது மகன் பரமசிவம் மற்றும் மருமகள் இறந்து விட்டதால், பரமசிவத்தின் மகன் கோகுல்(20) தனது தாத்தாவுடன் வசித்து வந்தார். கயிறு திரிக்கும் தொழில் செய்து வந்த இவர், டூவீலர் வாங்க வேண்டும் என தனது தாத்தாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ₹70 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை தங்கவேல் வாங்கி கொடுத்தார். இந்நிலையில், கடந்த மாதம் கோகுல், தனது செலவிற்காக டூவீலரை ₹50 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். கடந்த வாரம், அடகு வைத்த டூவீலரை மீட்டுத் தரும்படி, தன் தாத்தாவிடம் கோகுல் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என தங்கவேல் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: