தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சேலம், ஜன.24:  சேலம் அருகே கூலித்தொாழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் அருகேயுள்ள இளம்பிள்ளை ஏழுமாத்தானூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், இளம்பிள்ளையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜூ(48) என்பவர் கடந்த 2018ம்ஆண்டு மார்ச் 21ம்தேதி இரவு மதுகுடித்துக்கொண்டிருந்தார். அப்போது இளம்பிள்ளை பனங்காடு மெய்யனூரைச்சேர்ந்த ஜெயவேல்(23) என்பவரும் மதுகுடிக்க வந்தார். அப்போது ராஜூவுக்கும், வாலிபர் ஜெயவேலுவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜூ, ெஜயவேலின் பெற்றோரை கெட்டவார்த்தையால் திட்டினார். இதனால் கடும் கோபம் அடைந்த ஜெயவேல், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துவந்தார்.

அன்று இரவு 11 மணியளவில் ராஜூ, இளம்பிள்ளை ஏரிக்கரை முனியப்பன் கோயில் அருகில் இருந்து மதுகுடித்துக்கொண்டிருந்தார். அங்கு சென்ற ஜெயவேல், திடீரென முகத்தை துணியால் மூடி தாக்கினார். கையில் வைத்திருந்த கத்தியால் ராஜூவை குத்தி கொலை செய்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ஜெயவேலை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் ஆஜரானார். வழக்கை  விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், வாலிபர் ஜெயவேலுக்கு ஆயுள் தண்டனையும், ₹5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: