×

ஆக்கிரமிப்புகளால் திணறும் சிவகாசி நகராட்சி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா ?

சிவகாசி, ஜன. 24: சிவகாசி நகராட்சி பகுதி சாலைகள், பொது இடங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், தட்டி போர்டுகள், ஸ்டால்கள், கட்டிடங்களால் கடும் இட நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரமுகார்கள், அதிகாரிகளின் சுயநல போக்கால் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற சப்-கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகரை சுற்றியுள்ள கிராம ஊராட்சி பகுகுளிலும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்வதால் சிவகாசி நகர் பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால் சிவகாசி நகராட்சி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலை போக்குவரத்து நடைமுறையே தற்போதும் இருந்து வருகிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சாலை வரிவாக்கம், உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.    இதனால் சிவகாசி நகரில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  சிவகாசி நகரில் உள்ள முக்கிய ரத வீதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள், அதிகளவில் புதிது புதிதாக திறக்க படுகிறது.
இந்த கடைகளுக்கு முன்பு போதிய இடவசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து ஸ்டால்கள், தட்டி போர்டுகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையில் இட நெருக்கடி ஏற்படுவதால் டூவீலர், கார்களில் வருவோர் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இது போன்ற நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை பள்ளி நேரங்களில் இந்தபகுதிகளை கடந்து செல்வதே மாணவர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. அடிக்கடி  வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. சிவகாசி நகராட்சி பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நெடுஞ்சாலை துறை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகள் கடந்த பல ஆண்டுகளாக அகற்ற படவில்லை. இதனால் சிவகாசி நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நகராட்சி பகுதியில் புதிதாக துவங்கப்படும் கட்டிடங்கள், கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வணிக நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் துவங்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் மக்கள்  வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் சிவகாசி நகருக்குள் வரும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணக்கணக்கில் காத்திருந்து செல்லும் நிலைமை உள்ளது. சிவகாசி சப்-கலெக்டர் தினேஸ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சிவகாசி நகராட்சி பகுதியில் நகரில் உள்ள முக்கிய சாலைகள், ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புளை அகற்ற சப்-கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi Municipal Sub-Collector ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி