×

நெல் இனி வேண்டாம் பாசிப்பயறு, உளுந்து சாகுபடி செய்யுங்க

தேனி, ஜன. 24: தேனி மாவட்டத்தில் விவசாயிகள் இனிமேல் நெல் நடவு செய்ய வேண்டாம். பாசிப்பயறு, உளுந்து சாகுபடி செய்யுங்கள். இந்த சாகுபடிக்கு தேவையான அனைத்தையும் வேளாண்மைத்துறை 50 சதவீதம் மானியத்தில் வழங்குகிறது என வேளாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்தது. இதனால் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்ய முடிந்தது. போர்வெல், கிணற்றுநீர் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். போர்வெல், கிணற்று நீர் வசதி இல்லாத விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய வேண்டாம் என தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் இனிமேல் இரண்டாம் போகத்திற்கு நெல் நடவு செய்து விளைச்சல் எடுப்பது சிரமம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோடை பெய்தாலும் நெல் சாகுபடிக்கு தேவையான அளவு மழை கிடைக்காது. தற்போது முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 119.20 அடியாக மட்டுமே உள்ளது. இந்த நீர் குடிநீர் தேவைக்கு போதுமானதாக உள்ளது. நெல் சாகுபடிக்கு இந்த நீர் போதாது. எனவே நெல்லுக்கு பதில் விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்யலாம். இதற்கு தேவையான விதை பயறு வகைகளை அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் விவசாயிகள் 50 சதவீதம் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். தவிர உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், நீர் கடத்தும் குழாய்களும் 50 சதவீதம் மானியத்தில் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு வழங்குகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி இவற்றை பெற்றுக்கொள்ளலாம். தங்களுக்கு என்ன தேவை என்பதையும் உழவன் செயலி மூலம் வேளாண்மைத்துறைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறினர்.

Tags : Paddy ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...