உசிலம்பட்டி, ஜன.23: உசிலம்பட்டி அருகே பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை பணிநீக்கம் செய்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி அருகேயுள்ளது உத்தப்பநாயக்கனூர் பாலிடெக்னிக் கல்லூரி. இங்கு மெக்கானிக் இன்ஜினியரிங் ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக தினேஷ்(31) என்பவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இவரை தற்போது பணியில் இருந்து திடீரென நிறுத்தி விட்டனர். இதை கண்டித்து நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் லெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உங்கள் கோரிக்கையை கல்லூரியின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.