மதுரை, ஜன. 24: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயிலுக்கான திட்ட பணிகளை அரசு விரைவில் துவக்க வேண்டும் என்று அரசை எம்பி, வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் எம்பி வெங்கடேசன் கூறும்போது, ‘‘மதுரையில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்தும் வளர்ச்சி பெறும் வகையில் திட்டமிட வேண்டும். நாட்டில் மெட்ரோ ரயில் சேவை பல்வேறு நகரங்களிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. பத்து லட்சத்திற்குமேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என மத்திய அரசின் மெட்ரோ கொள்கை முடிவாகும். மதுரையில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பத்து லட்சத்தையும் தாண்டிவிட்டது. மதுரையில் பெருகிவரும் மக்கள்தொகையை கணக்கில்கொண்டு, அதற்கு ஏற்ப போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க இப்பொழுதே திட்டமிட வேண்டும். இதற்காக மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையை தமிழக முதல்வருக்கும் எம்பி வெங்கடேசன் அனுப்பி வைத்துள்ளார்.