திண்டுக்கல், ஜன. 24:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அனைத்து துறை அலுவலர்களுடானான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது, ‘மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்களில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள், குழந்தை நலன் தொடர்புடைய அலைபேசி எண் 1098 குறித்த துண்டு பிரசுரங்களையும் ஒட்ட வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் பள்ளிக்கு இருவர் என தேர்ந்தெடுத்து குழந்தை பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்து அவர்கள் மூலம் பிற மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் நேர்மறை எண்ணங்களை அறிந்து மேம்படுத்திட வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெயரில் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய அஞ்சல் அட்டைகள் வழங்கியும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 306 ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கி, ஊராட்சி மன்றத்தலைவரை உறுப்பினராக கொண்ட குழு ஏற்படுத்த வேண்டும். இக்குழு கூட்டத்தினை 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும்.