தஞ்சை, ஜன. 24: தஞ்சை அருகே ஞானம் நகரிலிருந்து வல்லம் செல்லும் புறவழி சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. எனவே இந்த பகுதியில் இரவு ரோந்தை அதிகப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை அருகே ஞானம் நகரிலிருந்து வல்லம் வரை செல்லக்கூடிய புறவழி 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோரை மறித்து அவர்கள் வைத்திருக்க கூடிய செல்போன், பணம் முதலியவற்றை தொடர்ந்து ஒரு போதை கும்பல் பறித்து செல்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேபோல் லாரி அல்லது காரில் வருவோர் சாலையோரம் வாகனங்களை நிறுத்திய உடனே எங்கிருந்தோ வரும் இந்த போதை கும்பலை சேர்ந்த 3, 4 பேர் அரிவாள், கத்தியுடன் வந்து பணம், செல்போனை பறித்து கொண்டு ஓடி விடுகின்றனர். இதேபோல் நீண்ட நேரம் வாகனம் ஓட்டிய அசதியில் சாலையோரம் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கும் டிரைவர்களை தாக்கி பணம், பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர்.