அறந்தாங்கி, ஜன.24: அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறை மற்றும் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் இலவச பொது, சர்க்கரை நோய், கண்மருத்துவ முகாம் காவல்துறை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ராமன் முன்னிலை வகித்தார். அறந்தை ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்களை நாகுடி என்.என்.எஸ் கிளினிக் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் அசாருதீன், பொதுமருத்துவர் வினோத் ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ஓட்டுனர்களுக்கு அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் ரவி கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். முகாமில் அறந்தை ரோட்டரி கிளப் பட்டயத் தலைவர் முரளிதரன், பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் பொன்.முத்துராமலிங்கம், செந்தில்குமார், பாலு, செந்தில்வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.