×

இலவச பஸ் பாஸ் வழங்காததால் பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

நாகை, ஜன.24: இலவச பஸ் பாஸ் வழங்காத தமிழக அரசை கண்டித்து நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ரோ தலைமை வகித்தார். கல்லூரி திறந்து பல மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் நீண்ட தூரங்களில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல மிகவும் கஷ்டமாக இருப்பதால் உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

இதுவரை பஸ் பாஸ் வழங்காத எடப்பாடி அரசை கண்டிக்கிறோம் ஆகிய கோஷங்களை எழுப்பி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின்னர் நாகை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட மாணவ, மாணவிகள் முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் மாணவ, மாணவிகளை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிவிட்டு வகுப்புகளை புறக்கணித்து கலைந்து சென்றனர்.

Tags : Bharathidasan University College ,
× RELATED வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலை கல்லூரியில் விளையாட்டு விழா