சென்னை: புழல் குடிநீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாதவரம், வியாசர்பாடி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் வராது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குடிநீர் குழாயில் ஒருங்கிணைப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நடக்கிறது. எனவே, மாதவரம் படேல் நகர் குடிநீர் விநியோகம் நிலையம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள சில பகுதிகளுக்கு இன்றும், நாளையும் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதி பொறியாளர் பகுதி-3 (மாதவரம்) என்பவரை 81449 30903 என்ற எண்ணிலும், பகுதி பொறியாளர் பகுதி- 4 (வியாசர்பாடி) என்பவரை 81449 30904 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.