பல்லாவரம்: தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் நேற்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
சேலத்தில் இருந்து சென்னை, கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை சேலத்தை சேர்ந்த கருப்பண்ணன் (48) என்பவர் ஓட்டினார். நடத்துநராக நாமக்கல் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (50) இருந்தார். காலை வேளை என்பதால் பயணிகள் அனைவரும் பாதி தூங்கியும், பாதி தூங்காத நிலையிலும் இருந்தனர். தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகேயுள்ள தரப்பாக்கம் என்னுமிடத்தில் பஸ் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறம் சாலையில் போய் நின்றது.