சென்னை: திருவல்லிக்கேணி அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி லால்பேகம் தெருவில் 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 3வது தளத்தில் அஸ்லா ஹமது என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது விட்டின் ஒரு அறையில் பயன்படுத்தாத பழைய பொருட்களை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 3.45 மணி அளவில் அஸ்லா ஹமது வீட்டின் பழைய பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரையும் வெளியேறும்படி கத்தினர். சத்தம் கேட்டு குடியிருப்பில் உள்ள அனைவரும் வெளியே ஓடிவந்தனர். அதற்குள் 3வது மாடி முழுவதும் தீ மளமளவென பரவியது.