×

காவல் நிலையம் அருகே பரபரப்பு மர்ம பொருள் வெடித்து சிதறி துப்புரவு பெண் தொழிலாளி படுகாயம்

பல்லாவரம், ஜன. 24: பல்லாவரம் அடுத்த பம்மல்  சங்கர் நகர் பழைய காவல் நிலையம் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறியதில் துப்புரவு பணியில் இருந்த நகராட்சி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார். பம்மல், சங்கர் நகர் 22வது  தெருவில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மேலும் அதே பகுதியில் உள்ள மக்களும், அந்த  இடத்தில் குப்பையை கொட்டிவிடுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, நகராட்சி பெண் துப்புரவு தொழிலாளி தேவகி (40) உள்பட துப்புரவு தொழிலாளர்கள் அங்கு சென்றனர். அங்கு குவிந்து கிடந்த குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு கிடந்த மர்ம பொருளை தேவகி (40) காலால்  மிதித்துள்ளார். இதில், பயங்கர சத்தத்துடன் அந்த பொருள் வெடித்துச் சிதறி, தேவகி காலில் காயம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், சக தொழிலாளர்கள் அவரை  மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தகவலறிந்து பம்மல் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி மற்றும் சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, மர்ம பொருள் வெடித்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது மீண்டும் அடுத்தடுத்து 5 முறை பயங்கர சத்தத்துடன்  மர்மப்பொருள் வெடித்து சிதறியது. இதனை கண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து  ஓடினர். இதையடுத்து தடயவியல் நிபுணர் சோபியா அங்கு சென்று, வெடித்த மர்மப்பொருளை சோதனை செய்தார். அப்போது,  ‘ஒயிட் பாஸ்பரஸ்’ எனப்படும் வேதியியல் கனிமம் என தெரிந்தது. பின்னர் அதனை கைப்பற்றி, ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். மர்ம பொருள் குறித்த அறிக்கை வந்த பிறகே, அதன் முழு விபரம் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதற்கிடையில், மர்மப்பொருள் வெடித்த இடம் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அங்கு நடமாடவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் மர்ம பொருளை வீசியது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசு  எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பம்மல் சங்கர் நகர் பகுதியில் மர்ம பொருள் வெடித்து சிதறி பெண் துப்பரவு தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : police station ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...