×

நாகர்கோவிலில் குடியரசு தின விழா ஏற்பாடு காவல்துறை கட்டுப்பாட்டில் அண்ணா விளையாட்டு அரங்கம்

நாகர்கோவில், ஜன.24: நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பங்கேற்ற குடியரசு தினவிழா கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தது. நாடு முழுவதும் இந்திய குடியரசு  தினவிழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில்  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கலந்துகொண்டு தேசியகொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று  வருகின்றன.விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் அவர்களது பள்ளிகளில்  கலை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை போன்று குடியரசு தினத்தன்று போலீஸ் அணி வகுப்பில் பங்கேற்கும் போலீசார் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதன்  தொடர்ச்சியாக நேற்று நாகர்கோவில் குடியரசு தினவிழா நடைபெறுகின்ற அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊர்க்காவல் படையினரும் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல்  காரணமாக கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசு தினவிழா விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற அண்ணா விளையாட்டு அரங்கம் முழுமையாக காவல்துறையின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட  இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் பலத்த சோதனைகள் நடந்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு  நிறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Tags : celebration ,Republic Day ,Nagercoil ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்