×

ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

கடலூர், ஜன. 24: கடலூர் டவுன்ஹால், ஜாங்கிட் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது.இப்பயிற்சி வகுப்பில் ஆட்சியர் பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு அரசு நிர்வாகத்தை நேரடியாக கையாள்வதற்கும், அரசின் செயல்திட்டங்கள் மக்களிடையே கொண்டு செல்வதற்கும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்குகள், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அனைத்து வீடுகளிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்திட வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் அப்பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என கண்காணித்திட வேண்டும் என்றார். பயிற்சி வகுப்பில் கூடுதல் இயக்குநர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமர்குஷ்வாகா, கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) ஆனந்தன், பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது