சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து மக்களை திரட்டி 29ம் தேதி போராட்டம்

பாகூர், ஜன 24: சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து மக்களை திரட்டி 29ம் தேதி போராட்டம் நடத்துவேன் என்று தனவேலு எம்எல்ஏ கூறினார். இது தொடர்பாக பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேலு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நான் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும், பாஜ ஆதரவுடன் ஆட்சி மாற்றத்திற்கு, மாகி சுயேட்சை எம்எல்ஏவை சந்தித்ததாகவும் கூறி கடந்த 21ம் தேதி தபால் மூலமாக எனக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தான் காங் தலைமை என் மீது சுமத்திய குற்றச்சாட்டு. இங்கு காங். கட்சி இரண்டு பிரிவாக செயல்படுகிறது. இதில், நான் அமைச்சர் நமச்சிவாயம் பிரிவை சேர்ந்தவர் என முதல்வர் பிரித்து விட்டார். நமச்சிவாயம் அணியில் நான், என் மகன் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் மறைமுகமாக 3 பேர் உள்ளனர். அதில், அமைச்சர் கமலக்கண்ணனும் இருக்கிறார். அமைச்சர் நமச்சிவாயத்தின் நேரடி ஆதரவாளராக இருந்தால், அவர்கள் மட்டம் தட்டி அழிக்கப்படுவர். இது தான் முதல்வரின் செயல்பாடாக இருக்கும். முதல்வரின் ஆசைக்கும், விருப்பத்திற்கும் இணங்க அவரது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, வெகுவிரைவில் வரும் 29ம் தேதி ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஊர்வலம் மற்றும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன். அப்போது, கவர்னர் மற்றும் சிபிஐயின் வசம் எனது புகாரை அளிப்பேன். அன்றைய தினம் புதுவை மக்களின் உணர்வு பிரதிபலிக்கும்.

ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் முதல்வர் நாராயணசாமி பதவி விலக தயார் என கூறி உள்ளார். என்னை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ததால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். அதிகாரத்தை பயன்படுத்தி என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர். என்னை நீக்கம் செய்யக்கோரி சோனியா, ராகுல் காந்தி இருவரும் கட்டளையிட்டுள்ளதாக முதல்வரும், மாநில தலைவரும் தெரிவித்துள்ளனர். அது வாய்மொழியாகவா? அல்லது எழுத்து பூர்வமாகவா? என தெரிவிக்க வேண்டும்.

என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை அறிவித்திருந்தால், அந்த கடிதத்தின் நகல் எனக்கு தரப்பட வேண்டும். என்னை பொறுத்தவரை காங். கட்சி என்னை தகுதி நீக்கம் செய்யவோ அல்லது கட்சியில் இருந்து விலக்கி வைக்கவோ எந்தவித தார்மீக அதிகாரமும் இல்லை. காங். அரசில் சுகாதார துறையின் மீது குற்றச்சாட்டு எழக்கூடாது என லட்சக்கணக்கில் மருந்து மாத்திரைகளை வழங்கி உள்ளேன். என்னை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது முறையானதாக தெரியவில்லை. உயர் மட்டக்குழு முடிவு செய்தது என சொன்னீர்கள். அந்த குழுவின் கடித நகல் கொடுத்தால், உங்களின் நோட்டீசிற்கு நான் இன்னும் விளக்கமாக பதில் கூறுவேன். நான் சுயேட்சை எம்எல்ஏவை சந்தித்ததாக கூறுகிறார்கள். இதே அமைச்சர் அதிமுக எம்எல்ஏவை சந்தித்து கட்சி அலுவலகத்தை திறந்து கொடுக்கிறார்.

முன்னாள் முதல்வர்களை, நீங்கள் எல்லாம் சந்தித்து பேசுகிறீர்களே. அது தவறில்லையா? முதல்வரை மாற்ற வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். இதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். மாற்றாக ஒருவர் வந்தால், புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும். என்னை யாரும் இயக்கவில்லை. இயக்கும் அளவிற்கு யாரும் இல்லை. என்னை இயக்குவது எனது தொகுதி மற்றும் புதுச்சேரி மாநில மக்கள் தான் என்றார்.

Related Stories: