புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரி அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை முதல் மூன்றாண்டுகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி
யளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதுவை மாநிலத்தில் உயர்கல்வித்துறையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற கடந்த 2019ம் ஆண்டில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கிடைத்தால் புதுவையின் முதல் மாநில பல்கலைக்கழகமாக விளங்கும். காரைக் காலில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முதுகலை பட்டப்படிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், பொருளாதாரம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட 11 முதுகலை படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு தோல்வியடைந்த மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 50 ஏக்கர் நிலத்தில் ரூ.338 கோடியில் தேசிய திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியை அமைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அகில இந்திய அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய சுயநிதி இடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதுச்சேரி பொறியியல் கல்லூரி தற்சார்பு நிலையை நோக்கி வருகிறது. 2018-19, 2019-2020 ஆகிய ஆண்டுகளில் ரூ. 14.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.