புதுச்சேரி, ஜன. 24: புதுவை கிராமப்புறங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 2ம் கட்ட கோரிக்கை விளக்க மக்கள் சந்திப்பு நடைபயணத்தை மேற்கொண்டனர். பாசிச, வகுப்புவாத தாக்குதல்களிலிருந்து நாட்டை பாதுகாப்போம், மாநில உரிமைக்கு குரல் கொடுப்போம், மக்கள் நலன் காக்க போராடுவோம் என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுவையில் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை தொடங்கி உள்ளனர். முதல்கட்ட பிரசாரத்தை நகர பகுதியில் முடித்துவிட்டு இக்கட்சியினர் தற்போது கிராமப்புறங்களில் 2வது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் 3வது நாளான நேற்று காலை திருக்கனூர் கடைவீதியில் இப்பிரசாரத்தை தொடங்கினர். பின்னர் மணவெளி, கொடத்தூர், குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, சந்தைபுதுக்குப்பம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், ஏஐடியுசி சேதுசெல்வம், துணை செயலாளர் கீதநாதன், பொருளாளர் சுப்பையா, தொகுதி செயலாளர் பெருமாள், இளைஞர் மன்றம் எழிலன், மாதர் சங்கம் சரளா, ஹேமலதா ஆகியோர் பங்கேற்று கோரிக்கையை விளக்கி பேசினர்.