சூலூர்,ஜன.23: பாப்பம்பட்டி ஊராட்சியில் காங்கிரீட் சாலையை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் காங்கிரீட் சாலை போடாத நிலையில் சாலை போட்டதாக கூறி கல்வெட்டு அமைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாப்பம்பட்டி 3வது வார்டு ராதிகா டெய்லர் வீடு முதல் பெருமாள் நகர் தண்ணீர் டேங்க் வரை காங்கிரீட் சாலை அமைக்கப்படவில்லை. இருந்தும் அந்த குறிப்பிட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டே ரூ.5.90 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைத்ததாக கூறி வேறொரு பகுதியில் சமீபத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. திடீரென கல்வெட்டு வைத்ததால் சந்தேகமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் கல்வெட்டு குறித்து ஊராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சியின் அலுவலகத்தில் சரியான தகவல் கிடைக்காததால் ஆன்லைன் மூலம் பாப்பம்பட்டி ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்துள்ளனர். அதில் அமைக்கப்படாத அந்த காங்கிரீட் சாலையை அமைத்ததாக கூறி தங்கவேல் என்பவருக்கு ரூ.5.90 லட்சம் காசோலை அளிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.