கோவை, ஜன. 23: அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினம் நாளை கொண்டாட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படிக்கும், 14 முதல் 18 வயது உள்ள மாணவிகளின் உடல நலம், மனநலம், பழகும் தன்மை, தன் சுற்றம், சுற்றுபுற சுத்தம், ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே உறவு ஆகியவை குறித்த நோக்கங்கள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்டம் கட்டமைப்பின்படி, வளரிளம் பருவ மாணவிகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நாளை (24ம் தேதி) அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடும் வகையில், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளை நடத்த வேண்டும். பெண் உளவியல் நிபுணர்கள் உதவியுடன் மனநலம், உடல்நலம் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 174 அரசு பள்ளிகளில் நாளை பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பள்ளிகளுக்கு தலா ரூ.1,539 நிதி அளிக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.