ஏட்டுவை மிரட்டிய 2 பேர் கைது

ஈரோடு, ஜன.23: ஈரோடு அருகே வைராபாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் மோகன்குமார் (28). இவர், தினக்காற்று பத்திரிகையில் மாவட்ட போட்டோ கிராபராக பணியாற்றி வருகிறார். இதேபோல், ஈரோடு அருகே ரயில்வே காலனி பெரியசடையம்பாளையம் பி.கே.கே.எஸ். வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் (26) என்பவர் மொடக்குறிச்சி பகுதியில் இதே பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு ஏட்டு செந்தில்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது, இருவரும் நாங்கள் தினக்காற்று பத்திரிக்கை நிருபர்கள் என்று கூறி தங்கள் பத்திரிகையை கொடுத்தனர். பின்னர், சுரேந்திரன் செல்போனில் காவல் நிலைய உள்பகுதியில் வீடியோ எடுத்தார். இதைப்பார்த்த ஏட்டு செந்தில்குமார் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு செந்தில்குமாரை இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரையும், சுரேந்திரனையும் கைது செய்தனர்.

Related Stories: