திருப்பரங்குன்றம், ஜன்.23: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாக சுமார் ரூ.31 லட்சம் இருந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் டிச.17ம் தேதி முதல் ஜன.22ம் தேதி வரை பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ராமசாமி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோகுலகண்ணன், அலுவலர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்களும், பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 118 கிராம் தங்கம், ஒரு கிலோ 366 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கமாக ரூ.31 லட்சத்து ஆயிரத்து 888 இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.