பட்டிவீரன்பட்டி, ஜன. 23: பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் பிரிவில் சாலையோரம் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது முத்துலாபுரம் பிரிவு. இங்குள்ள பஸ்ஸ்டாப் அருகாமையில் உயரழுத்த இரட்டை மின்மாற்றி மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இரட்டை மின்மாற்றிக்கு வரும் மின்சார கம்பங்களும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பங்கள் அருகேதான் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் இந்த இடத்தை கடக்கும் முத்துலாபுரம் வாகனஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் பஸ்ஸ்டாப்பில் நிற்கும் பயணிகளும் அச்சத்துடனே நிற்க வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.