×

சேலத்தில் வரதட்சணை கேட்டு சித்ரவதை சிறுநீரகம் பாதித்த மனைவியை தவிக்க விட்டு ஓடிய கணவன் கைது

சேலம், ஜன.23: சேலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவன், மனைவிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்ததும், மருத்துவமனையிலேயே அவரை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கொடுமைக்கார கணவன் மற்றும் அவரது தாயை கைது செய்தனர். சேலம் களரம்பட்டி மெயின்ரோடு கருங்கல்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ். ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது ஒரே மகள் ஜீவிதா(27), எம்சிஏ பட்டதாரி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன்(30) என்பவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 27 பவுன் நகை மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து சீர்வரிசை பொருட்களையும், பாண்டியராஜ் கொடுத்தார். சுந்தரபாண்டியன் திண்டுக்கல்லில் ஓட்டல் நடத்தி வந்தார். பின்னர் பெங்களூருவில் ஓட்டல் வைக்க வேண்டும் என கூறி, ஜீவிதாவின் பெற்றோரிடம் ₹4 லட்சத்தை வாங்கினார். ஆனால், அதன் பின்னரும் அடிக்கடி பணம் வாங்கி வருமாறு, மனைவியை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

ஒரே மகளின் சந்தோஷத்திற்காக, அவர் கேட்கும்போதெல்லாம் பாண்டியராஜ் பணம் கொடுத்து வந்தார். இந்நிலையில், திடீரென ஜீவிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது ஜீவிதாவுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மனைவியை அங்கேயே தவிக்க விட்டு, சுந்தரபாண்டியன் மட்டும் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டார்.  அவரிடம் பாண்டியராஜ் குடும்பத்தினர் பலமுறை பேசியும், பல லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் வருவேன், என அவர் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில், தனது மகளுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க, பாண்டியராஜ் முன்வந்தார். இதற்கான மருத்துவ பரிசோதனை முடிந்து, அடுத்தமாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஜீவிதாவிடம் விவாகரத்து கேட்டு சுந்தரபாண்டியன் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவிதா, வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர், மாமியார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த சுந்தரபாண்டியன், அவரது தாயார் காஞ்சனா(57) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.

Tags : kidnapping wife ,kidnapping ,
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது