நாமகிரிப்பேட்டை, ஜன. 23: நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு பெருமாள் கோயில்மேடு- முள்ளுக்குறிச்சி சாலையில், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இதை முறையாக பராமரிக்காததால், உள்ளே பயணிகள் உட்கார போடப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப்களை சமூக விரோதிகள் உடைத்து முற்றிலுமாக சேதப்படுத்தி விட்டனர். தவிர இரவு நேரத்தில் நிழற்கூடத்தை ஆக்கிரமித்து மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை உடைத்து வீசிச்செல்கின்றனர்.
இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உட்காரக்கூட இடமில்லாமல் சிரமப் படுகின்றனர். மது குடிப்பவர்கள் உணவு, இறைச்சி கழிவுகளை வீசிச்செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மதிய நேரத்தில் பஸ்சுக்கு காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள், ராசிபுரம், மெட்டாலா மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல மூட்டைகளுடன் வரும் விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பழுதடைந்த நிழற்கூடத்தை இடித்து அகற்றி, புதுப்பிக்க வேண்டும். இரவில் நிழற்கூடத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.