×

அஞ்செட்டி வங்கியில் கொள்ளை முயற்சி கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு


தேன்கனிக்கோட்டை, ஜன.23:அஞ்செட்டியில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அஞ்செட்டியில் தனியார் கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி உள்ளது. வங்கியை ஒட்டி ஏடிஎம் மையம் உள்ளது. அஞ்செட்டியை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வங்கியின் பின்புறமாக புகுந்து, கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, கேஸ் சிலிண்டர் மூலம் பின்பக்க கேட்டினை வெல்டிங் வைத்து தகர்க்க முயன்ற போது, தீ விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத தீவிபத்தின் காரணமாக அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் பல கோடி பணம், நகை தப்பியது. இதுகுறித்து போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையர்கள் விட்டு சென்ற கேஸ் சிலிண்டர், கொள்ளையடிக்க பயன்படுத்த கொண்டு வந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வங்கியின் மேலாளர் விஜயராமராஜ்(36) அஞ்செட்டி போலீசில் புகாரளித்தார். இதன்பேரில், மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் விசாரணை நடத்தினார். கொள்ளையர்களை பிடிக்க அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : organization ,robbers ,Special Forces ,
× RELATED டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு...