×

சேத்துப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 சவரன் திருட்டு

சேத்துப்பட்டு, ஜன.23: சேத்துப்பட்டு அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் 20 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்துப்பட்டு அடுத்த மோரகணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(43). இவர் சேத்துப்பட்டு துணை மின்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நவநீதம். நேற்று காலை 9 மணியளவில் சந்திரசேகர் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இதையடுத்து, நவநீதம் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு சாவியை வெளியே உள்ள கயிற்று கட்டிலில் மறைத்து வைத்துவிட்டு, விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர், வேலை முடிந்ததும் பகல் 11 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது, வீட்டின் சாவியானது தான் வைத்த இடத்தில் இல்லாமல், கயிற்று கட்டிலிலேயே வேறு இடத்தில் இருந்தது. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது, அங்குள்ள அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

இதேபோல், நேற்று முன்தினம் சேத்துப்பட்டு அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் விவசாயி வீரபத்திரர் என்பவரது வீட்டில் பூஜை அறையில் வைத்திருந்த பணம் ₹18 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் திருடிச்சென்றனர். மேலும், சேத்துப்பட்டு நபி நாயகம் தெருவில் உள்ள நான்கு கடைகளில் நேற்று முன்தினம் இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. சேத்துப்பட்டு பகுதிகளில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : Theft ,house ,Chetupati ,Pattadakal ,Varanasi Electricity Board ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்