திட்டக்குடி, ஜன. 23: திட்டக்குடியை அடுத்துள்ள இடைச்செருவாய் மற்றும் ஆ.பாளையம் கிராமங்களின் இடையே தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் துவங்குவதற்கு கட்டுமான பணிகள் முடிவடைந்து, நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.இதற்கு இரண்டு கிராம மக்களும் ஆட்சேபனை செய்தனர். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன் விவசாய பணிகளும் பாதிக்கப்படும் என கூறி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன், இரண்டு கிராம மக்களையும், நிறுவனத்தின் உரிமையாளரையும் அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தினார்.இதில் பொதுமக்கள் சார்பில், இந்த நிறுவனத்தை துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை எனவும், இவ்வாறு உரிய அனுமதியும் இன்றி சட்டத்திற்கு புறம்பாகவும், குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்களுக்கு இடையூறாகவும் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இந்த நிறுவனம் செயல்பட இருப்பதாக கூறி, அவ்வாறு அதை இயக்காத வகையில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.